நாகர்கோவில் பின்னணியில் ஒரு நச் சினிமா
புறாப்பந்தயம் தான் வாழ்வு எனச் சுற்றும் ஹீரோ. அவரை புறா பந்தயத்தில் வீழ்த்த வேண்டிய கட்டாயம் எதிர்க்கோஷ்டிக்கு ஏற்படுகிறது..அதற்கான காரணமாக ஈகோ இருக்கிறது. பிற மனிதனின் ஈகோவை வெல்ல வேண்டுமானால் அதற்காக நாம் வாழ்வையே பலி கொடுக்க வேண்டிவரும் என்பதை படம் பேசியுள்ளது. இப்படியான கதைக்குள் இன்னும் பல அட்டகாசமான கேரக்டர்களையும் அவர்களுக்கான வாழ்வையும் இம்மியும் திணிப்புத்தன்மை இல்லாமல் படத்திற்குள் புகுத்தி விழி வியக்க வைத்துள்ளார் அறிமுக இயக்குநர் ஜான் கிளாடி
இந்தப் படத்தில் நடித்தவர்களை ஹீரோ..ஹீரோயின் என்று வரிசைப்படி சிறப்பிக்கவே முடியாது. ஏன் என்றால் படத்தில் ஒரு ப்ரேமில் தோன்றிய கேரக்டர் கூடி தெறித்தனம் காட்டியுள்ளது. ஹீரோ, அவர் நண்பர், பண்ணையார், வில்லன், ஹீரோ அம்மா என முத்திரைப்பதித்தவர்கள் லிஸ்டே பெரும் லிஸ்ட் ஆக இருக்கிறது
ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர் ஒரு தெருவைப் படம் பிடிக்க மாட்டார்..அந்தத் தெருவை இயல்பாக காட்டுவார். இப்படத்தின் கேமராமேன் நாகர்கோவில் நிலப்பரப்பை அப்படியே எதார்த்தம் மீறாமல் பதிவு செய்துள்ளார். இப்படத்தின் எடிட்டருக்கு எத்தனை லைக் போட்டாலும் தகும். அதேபோல் இசையமைப்பாளருக்கு ஏகப்பட்ட ஹார்ட்டீன்ஸ்
ஒரு மிகச்சிறந்த திரைக்கதை மட்டுமே படத்தின் கேரக்டர்களை நினைவில் நிறுத்தி வைக்கும். லிங்கம், அமலு, சுயம்பு, ரமேஷ் பண்ணையார் என இதில் ஏகப்பட்ட பெயர்கள் நம் மனதை விட்டு விலகவே இல்லை. எளிய மக்களின் சுயமரியாதையை மீட்டெடுக்க அவதரித்த அய்யா வைகுண்டர் வழிபாட்டையும் அதை கடைபிடிக்கும் மக்களையும் தமிழ்சினிமாவில் ஜான் கிளாடி தான் காட்சிப்படுத்தியுள்ளார். வெல்டன்
தெளிவான திரைக்கதை, செறிவான கேரக்டர்கள், மிரட்டலான மேக்கிங் என இந்தப் புறா பந்தயத்தை கொண்டாட இன்னும் நிறைய பாசிட்டிவ்ஸ் இருக்கு. போய் படத்தைப் பாத்துட்டு வந்து நீங்களும் சொல்லுங்க
4/5
-மு.ஜெகன் கவிராஜ்