வாழை பட 25 வது நாள் வெற்றி விழா!

Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar, Farmer’s Master Plan Production வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, “வாழை”திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது. இப்படத்தைத் தமிழகமெங்கும் ரெட்ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டது. 4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியினை படக்குழுவினர் கோலாகலமாகக் கொண்டாடினர்.

பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்வினில், படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த ரெட்ஜெயன்ட் மூவிஸ் செண்பக மூர்த்தி, அர்ஜூன் துரை ஆகியோருக்கு வெற்றிக்கேடயம் வழங்கப்பட்டது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சார்பில் விழாவில் கலந்துகொண்ட பிரதீப் அவர்களுக்கு  வெற்றிக்கேடயம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது…

என் சக தமிழ் திரைத்துறை தோழர்களுக்கு நன்றி. என் திரையுலகம் இந்த வாழை படத்தைக் கொண்டாடிய விதம், எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. திரைத்துறை இயக்குநர்கள், நண்பர்கள் தான் முதலில் இப்படத்தை எல்லோரிடமும் கொண்டு சேர்த்தார்கள். நன்றி. நான் வேலை பார்த்த அனைத்து தயாரிப்பாளர்களும் கொடுத்த சுதந்திரம் தான் இந்த வெற்றிக்குக் காரணம், ரஞ்சித் சார், தாணு சார், ரெட்ஜெயன்ட், டிஸ்னி என நால்வருக்கும் என் நன்றிகள். திலீப் மாஸ்டர் ஏன் என்னைத் தேர்ந்தெடுத்தாய் என்பார், ஆனால் ஃபைட்டில் நான் எப்போதும் உணர்வைக் காட்சிகளைச் சேர்த்து வைப்பேன், அதற்கான சுதந்திரம் தருவார். நான் படம் எடுப்பேன் அதில் ஃபைட் இருக்காது என்பார், அப்போதிருந்து அவரை நேசிக்க ஆரம்பித்து விட்டேன். வாழை பார்த்து நானும் இணைந்து செய்கிறேன் என்றார். அப்போதிலிருந்து இந்த பயணம் தொடர்கிறது. இந்த படத்தை நானே வெளியிடக் காரணம், ரெட்ஜெயன்ட் இருக்கிறது எனும் தைரியம் தான். செண்பக மூர்த்தி சார் படம் பார்த்து, உங்களுக்கு மிகப்பெரிய பெயர் கிடைக்கும் என வாழ்த்தினார். நன்றி. என் டீம் மிகப்பெரிய உழைப்பைத் தந்தனர். அதை விட என் நடிகர்கள் மிகப்பெரிய உழைப்பைத் தந்தனர், அவர்கள் தான் இந்த வெற்றிக்குக் காரணம். கலையரசன், திவ்யா, நிகிலா விமல் எல்லோரும் அந்த கதாபாத்திரங்களாகவே மாறினார்கள். இந்த பையன்களை என்னவேணாலும் செய்ய வைக்க முடியும் எனத் தெரியும், ஆனால் நடிகர்கள் எப்படி ஒத்துக்கொண்டார்கள் என ஆச்சரியப்பட்டேன், நிறைய அவர்களைத் துன்புறுத்தியுள்ளேன், ஆனால் அதைப் புரிந்துகொண்டார்கள். நிகிலா விமலை முதலில், வேறு படத்திற்காகத் தான் தேர்ந்தெடுத்தேன், இது தான் என் வாழ்க்கையின் பெரிய படம் எனச் சொல்லி, நடிக்க வைத்தேன்.  ஏன் கிளைமாக்ஸில் டீச்சர் இல்லை என எல்லோரும் கேட்டார்கள்,  ஆனால் அப்போது அவரது டேட் இல்லை, இந்தப்படத்தை மொத்தமாக முடித்து விட்டு ஒன்றரை வருடம் கடந்து தான், கடைசி பாட்டை எடுத்தேன். இந்தப்படம் ஒரு முழுமை இல்லாமல் இருந்தது, படம் பார்ப்பவர்கள் என்ன உணர்வோடு செல்வார்கள் என நினைத்துத் தான் பாட்டை படமாக்கினேன். அப்போது சிவனைந்தன் டீச்சர் மடியில் படுத்து அழுவதாகத் தான் காட்சிகள் இருந்தது. அதை எடுத்திருந்தால் இப்போது வரும் சர்ச்சைகள் இருந்திருக்காது. என்னைப்பற்றி கேள்விகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கான பதில் தான் வாழை படம். இன்னும் பல படங்கள் எடுத்துக்கொண்டே இருப்பேன், நான் வாழ்நாள் முழுதும் என் கதைகளைச் சொல்லிக்கொண்டே இருப்பேன் நான் ஓய்வு பெறும் போது, அடுத்துக் கதை சொல்ல ஆட்களைத் தயார் செய்திருப்பேன். அவர்கள் சொல்ல ஆரம்பிப்பார்கள். நீ ஏன் வலியைச் சொல்கிறாய் ? பெருமை இல்லையா ? என்கிறார்கள். இதோ இந்த பசங்க தான் என் பெருமை. இன்னும் இன்னும் பல கதைகள் வரும். என் வாழ்க்கையைக் கலையாக மாற்றியிருக்கிறேன் இந்த கலைக்கு என்றும் உண்மையாக இருப்பேன். நன்றி.

actor Kalaiyarasandirector Mari SelvarajVaazhai movie