வாழ்வில் சில அத்தியாங்கள் மின்மினி பூச்சி போல டக் என்று வந்து மறைந்து போவதுண்டு. இந்தப் படமும் அப்படியான ஒரு தருணத்தை பதிவு செய்கிறது.
கெளரவ் காளை, பிரவீன் கிஷோர் பள்ளி நண்பர்கள். இவர்களின் 2016-ஆம் ஆண்டின் பள்ளி வாழ்வு காட்டப்படுகிறது. இவர்களின் மோதலும் நட்புமாக படம் பயணிக்கிறது. திடீரென ஒரு பெரும் விபத்து நேர்கிறது. அது சபரியின் வாழ்வை பெரிதும் பாதிக்கிறது. சபரியை மீட்டெடுக்க புதிய நட்பாக எஸ்தர் அணில் உள்ளே வருகிறார். அப்படியே கட் செய்தால் கதை நிகழ்காலத்திற்கு வருகிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து இவர்களின் வாழ்வில் என்னென்ன நடந்தது? என்பதாக கதை விரிகிறது. 2016-ஆம் ஆண்டில் பள்ளி மாணவர்களாக நடித்த அதே கதாப்பாத்திரங்கள் நிகழ்காலத்திலும் நடித்திருப்பது புதுமையிலும் புதுமை. வாழ்த்துகள் இயக்குநர் ஹமீதா
நாயகர்களாக கெளரவ் காளை, பிரவீன் கிஷோர் இருவரும் பாஸ் மார்க் வாங்குகிறார்கள். 2016-ஆம் ஆண்டில் அவர்களின் குறும்புத்தன நடிப்பிற்கும், 2024-ல் அவர்களின் முதிர்ச்சியான நடிப்பிற்கும் நல்ல வேறுபாடு இருக்கிறது. நாயகி எஸ்தர் அணில் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளார்
மேலும் படத்தில் உள்ள கேரக்டர்கள் எல்லாம் ஈர்க்கும் படியே உள்ளது
கதீஷா ரஹ்மான் பின்னணி இசையால் வசீகரிக்கிறார். நல் வரவு. ஒரு காதல் பாடல் ரிப்பீட் மோட் ரகத்தில் உள்ளது. ஒளிப்பதிவாளர் ஊட்டியின் அழகை மேலும் அழகாக காட்டியுள்ளார்.
ஹமீதா கவிதை கலந்து தத்துவவியலை கதையாக கோர்த்துள்ளார். முதல்பாதியில் கவித்துவம் நிரம்பியுள்ளது. இரண்டாம் பாதியில் தத்துவம் நிரம்பியுள்ளது. சிறிய வாழ்வை அழகாக நகர்த்துவது அன்பு தான். அதை மென்மையாகச் சொல்லும் படம் இரண்டாம் பாதியில் சற்றே செயற்கையாக தெரிகிறது. தமிழ்சினிமாவில் எட்டு வருடம் காத்திருந்து அதே கேரக்டர்களை வைத்து திரும்பவும் ஷுட் பண்ணுவதென்பது அரிதினும் அரிது. அதை இந்தப்படம் செய்திருக்கிறது. அதற்காகவே படத்தை ரசிக்கலாம்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்