செஞ்சி -விமர்சனம்

புதையலும் அதைக் கண்டுபுடிக்கும் பயணமுமாக பயணிக்கும் கதைகள் எப்போதுமே ஒரு சுவாரஸ்யத்தைக் கொடுக்கும். அந்த வகையில் இந்த செஞ்சி நம்மை எப்படி ஈர்க்கிறது?

இப்படத்தை எழுதி ,இயக்கி, தயாரித்ததோடு, முதன்மைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் கணேஷ் சந்திரசேகர். அவரின் ஆர்வமும் முயற்சியும் பாராட்டுக்குரியது. ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் இந்தப் படம் உருவாகி உள்ளது .

செஞ்சியின் கதையைப் பார்க்கலாம்

பிரான்சிலிருந்து பாண்டிச்சேரிக்கு வரும் சோபியா தனது மூதாதையர் வீட்டை அடைகிறாள்.வீட்டில் நுழையும் போதே ஒரு கெட்ட சகுனம் வருகிறது. ஆனால் அவள் அதைப்பற்றி கவலைப்படாமல் உள்ளே நுழைகிறாள்.அங்கே பழைய புராதன கலைப் பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை ரசித்து ரசித்துப் பார்க்கிறாள் .ஆனால் அங்கே ஏதோ ஒரு அமானுஷ்யம் அவளுக்குத் தட்டுப்படுகிறது. எவ்வளவு தைரியமாக இருந்தாலும் மனதிற்குள் ஒரு பயம் வருகிறது. அங்கே ஒரு ஓலைச்சுவடியைக் கண்டெடுக்கிறாள். அதில் ஏதோ ரகசியம் இருப்பதாகப் படவே தொல்பொருள் ஆராய்ச்சி செய்யும் ஜாக் ஆண்டர்சனை நாடுகிறாள். அவர் வந்து அதை உற்று நோக்கிய போது அதற்குள் ஏதோ ஒரு ரகசியம் புதைந்திருப்பதாகத் தோன்றுகிறது. அது பற்றி மேலும் அறிய விரும்பும்போது அதில் ஒரு புதையலுக்கான ரகசிய குறியீடுகள் உள்ளதாக அவருக்குத் தெரிகிறது.சோபியாவுடன் இணைந்து தேட ஆரம்பிக்கிறார்.ரகசிய குறிப்புகளை வைத்துக்கொண்டு கிடைத்த குறியீடுகளின் படி தேட ஆரம்பிக்கிறார்கள். புதையல் வேட்டைக்கான பாதையில் ஐந்து தடயங்கள் உள்ளதாகக் குறிப்புகள் கூறுகின்றன. ஐந்தையும் ஒவ்வொன்றாக அடைந்து ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று இறுதியில் அந்தப் புதையலை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதே செஞ்சியின் கதை.

படத்தில் நடித்துள்ள இயக்குநர் கணேஷ் சந்திரசேகர் இயல்பாக நடித்துள்ளார்.வசன உச்சரிப்பில் அவர் இன்னமும் தேறிவர வேண்டும்.ஒரே நேரத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் வசனம் வருவதைத் தவிர்த்திருக்கலாம்.

வெளிநாட்டிலிருந்து வரும் ஆங்கிலேயப் பெண்மணியாக ரஷ்ய நடிகை கெசன்யா நடித்துள்ளார். தோற்றத்திலும் உடல் மொழியிலும் வசன உச்சரிப்பிலும் அனுபவம் தெரிகிறது.

படத்தில் சுட்டித்தனம் செய்யும் அந்த ஐந்து சிறுவர்களும் மாஸ்டர் சாய் ஸ்ரீனிவாசன் மாஸ்டர் தர்சன் குமார் மாஸ்டர் விதேஷ் ஆனந்த் மாஸ்டர் சஞ்சய் பேபி தீக்ஷன்யா மனதில் பதிகிறார்கள்.படத்தில் மூன்று பாடல்கள் தேடல் தேடு என்ற பாடல் படத்தின் ஆரம்பத்தில் டைட்டில் வரும் போது ஒலிக்கிறது.

பின்னணி இசையில் இசையமைப்பாளர் எல். வி. முத்து கணேஷ் பளிச்சிடுகிறார்.

படத்தில் நடித்துள்ள நடிகர்களை விடவும் படத்துக்குப் பெரிய பலமாக அமைந்துள்ளது படத்தில் வரும் லோகேஷன்கள் தான். படம் பெரும்பாலும் கல்லார் காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது . கதைப்படி செஞ்சி, மதுரை, ராஜபாளையம், தென்காசி , கல்லார் என்று நிகழ்விடங்கள் வருகின்றன.

காட்சிகள் செஞ்சி தொடங்கி பல்வேறு நிலப்பகுதிகளிலும் படமாகி உள்ளது .அந்தக் காற்று செதுக்கிய சிற்பங்களாக இருக்கும் அந்தப் பாறைகள் நடுவே சென்று சந்து பொந்து இடுக்கு வழியில் எல்லாம் புகுந்து புறப்பட்டு உள்ளது கேமரா. ஒளிப்பதிவாளர் ஹரிஸ் ஜிண்டேவுக்குப் பாராட்டு கூறலாம். நம் தென்னிந்தியப் பகுதியில் இதுவரை கேமரா நுழையாத பல இடங்களில் நுழைந்து படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள்.

பழையன கழிதல் என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் பழையனவற்றில் எண்ணற்ற வரலாற்றுப் பொக்கிசங்களும் கதைகளும் உண்டு. அதை ஓரளவு சொல்ல முயற்சித்தமைக்காக செஞ்சி டீமை பாராட்டலாம். மத்தபடி திரைக்கதை, நாடகத்தன்மையற்ற காட்சிமொழி ஆகியவற்றை இயக்குநர் டீம் அடுத்தடுத்த படங்களில் தரும் என்று நம்புவோம்..
3/5
-மு.ஜெகன் கவிராஜ்

#Gingee

Alien Picturesdirector Ganesh ChandrasekaranGingee movie